சென்னை : மீனம்பாக்கத்தில், நாய் துரத்தியதால் பயந்து, நான்காவது மாடியில் இருந்து குதித்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவன் ஒருவன் பரிதாபமாக இறந்தான். மாணவனின் விருப்பப்படி கண்கள் தானம் கொடுக்கப்பட்டன. இந்த வழக்கில் விமான பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: மீனம்பாக்கம், இந்தியன் ஏர்லைன்ஸ் குடியிருப்பு, நான்காவது பிளாக்கில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ஏர் டிராபிக் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி அஞ்சனா. இவர்களின் மகன் ஆசிஷ் அரவிந்த் (11) மகள் ஷிவானி (4). ஆசிஷ் அரவிந்த், கேந்திர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், தேர்ச்சி பெற்ற ஆசிஷ் அரவிந்த், அடுத்த பிளாக்கில் வசிக்கும் தனது மாமா சங்கர்ராவ் வீட்டிற்கு சென்று இனிப்பு வழங்கினான். பின், நான்காவது மாடியில் சிறுவன் ஒருவனுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
அதே பிளாக்கில், விமான பணிப்பெண்களாக வேலை பார்க்கும் நமீதா நாயக் (25), அவரின் சகோதரி சமீதா நாயக் (22) வசித்து வந்தனர். அவர்கள் டாபர்மேன் நாய் ஒன்று வளர்த்து வருகின்றனர். இரவு நேரத்தில் அதை நான்காவது மாடியில் உலாவவிடுவது வழக்கம். நேற்று முன்தினம் நமீதா நாயக் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த சமீதா நாயக் வழக்கம்போல் இரவில் நாயை மாடியில் உலாவ விட்டார். அப்போது, மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆஷிஷ் அரவிந்தை நாய் துரத்தியது. இதில், பயந்துபோன அச்சிறுவன் மாடியில் இருந்து குதித்தான்.
படுகாயமடைந்த ஆஷிஷ் அரவிந்த், உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை பலனளிக்காமல் இறந்தான். இது குறித்து மீனம்பாக்கம் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிந்து, சமீதா நாயக்கை கைது செய்து விசாரித்து வருகின்றார். இறந்துபோன ஆஷிஷ் அரவிந்த், பள்ளியில் படிக்கும் போது கண்களை தானம் செய்ய பதிவு செய்திருந்தான். அவனின் விருப்பப்படி ஆஷிஷ் அரவிந்தின் கண்கள் நேற்று தானம் செய்யப்பட்டன.
0 comments:
Post a Comment